சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.23.84 கோடி மதிப்பிலான 253 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 23 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 253 வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில் 10 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 23 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 253 வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ. வேலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பி. பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.