பார்சிலோனா: பார்சிலோனா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசைப் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை வீழ்த்தி, டென்மார்க் வீரர் ஹோல்கர் நோட்ஸ்கோவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. உலகின் 3ம் நிலை வீரர் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை அரை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில், டென்மார்க்கை சேர்ந்த உலகின் 9ம் நிலை வீரர் ஹோல்கர் ரூனே, ரஷ்யாவை சேர்ந்த கரேன் அப்கரோவிச் கசனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அதையடுத்து நடந்த இறுதிப் போட்டியில் அல்காரஸ், ஹோல்கர் ரூனே மோதினர். முதல் செட் கடும் இழுபறியில் இருந்தபோதும், அதை ரூனே கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டை அவர் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரூனே வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு 500 புள்ளிகளும், ரூ.5.18 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த அல்காரசுக்கு 330 புள்ளிகளும், ரூ. 2.76 கோடி பரிசுத் தொகையும் கிடைத்தது.