சென்னை: திருவள்ளூர் ஆவடி கிரி நகரில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த திரு.தேவன் த/பெ. சின்னையா (வயது 50) மற்றும் சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த திரு.மோசன், த/பெ.குப்பையா (வயது 39) ஆகிய இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களும் இன்று (7-9-2023) காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.