டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் மாநில வாரியாக விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில்; கடந்த 4 ஆண்டுகளில் மாநில வாரியாக விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்துக்கு ரூ.587 கோடி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு ரூ.19 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
குஜராத்தை விட தமிழ்நாட்டில் அதிக பயிற்சி மையங்கள் உள்ளபோது சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 15 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்களும் தமிழ்நாட்டில் 18 மையங்களும் உள்ளன. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்கள் குஜராத்தை விட தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. குஜராத்துக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.346 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து கர்நாடகாவுக்கு 127.25 கோடியும், அருணாச்சல பிரதேசத்துக்கு 60.11 கோடியும், ராஜஸ்தானுக்கு 53.19 கோடியும், பீகாருக்கு 46.33 கோடியும், பஞ்சாப் மாநிலத்துக்கு 46.24 கோடியும், ஹரியானாவுக்கு 45.74 கோடியும், நாகாலாந்துக்கு 38.00 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்துக்கு 30.54 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.