திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,894 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,508 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.30 கோடி கிடைத்தது. இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் பக்தர்கள் ஏடிஎன்ஜி கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடியிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.