சென்னை: தூத்துக்குடியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், புதூர் குறுவட்டம், சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன்(12), அருண்குமார்(9) மற்றும் கார்த்திகேயன் என்பவரின் மகன் சுதன்(7) ஆகியோர் மே 12ம் தேதி மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.