கரூர்: திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டையை சேர்ந்த டிரைவர் மலையாளம்(51) என்பவர், கடந்த ஜூன் 17ம்தேதி காலை கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே ஊருக்கு செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது, கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பென்சில் என்கிற தமிழழகன்(30), பிரகாஷ்(25), ஹரிஹரன்(24), படிக்கட்டுத்துறை மனோஜ்(24) ஆகிய 4 பேரும் போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழழகன் கத்தியால் மலையாளத்தை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிய மலையாளம் கரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் போலீசார், பிரகாஷ், ஹரிஹரன் மற்றும் மனோஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ரவுடி பென்சில் என்கிற தமிழழகன், அரிக்காரம்பாளையம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்தது. உடனடியாக இரவு 11 மணியளவில், டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார், தமிழழகனை கைது செய்ய சென்றனர். அவர் கத்தியை காட்டி மிரட்டி, தப்ப முயன்றதாக தெரிகிறது.இதனால், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தமிழழகனின் வலது காலின் முட்டியை பார்த்து சுட்டுள்ளார். இதில் காயமடைந்தவரை, கருர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பென்சில் என்கிற தமிழழகன் மீது 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.