ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில் வலம் வரும் மர அணில்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பகுதிகளுக்கு அதிகளவு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பல ஆயிரம் செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
தற்போது ரோஜா கண்காட்சிக்காக ஊட்டி ரோஜா பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டி ரோஜா பூங்கா சுற்றியுள்ள மரங்களில் அவ்வப்போது சுற்றித்திரியும் மர அணில்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. இவைகள் அங்குள்ள மரங்களில் தாவி தாவிச் செல்வதும், விளையாடுவதையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த மர அணில்களை வியப்புடன் பார்த்து மகிழ்கின்றனர்.