ஊட்டி : ரோஜா கண்காட்சி நெருங்கிய நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டியில் கோடை சீசன் களை கட்டத்துவங்கியுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், ரோஜா பூங்காவும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனினும், மழை குறைவால் மலர்கள் பூப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், பூங்கா நிர்வாகம் நாள் தோறும் செடிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துள்ளன. ரோஜா பூங்காவில் பூத்துள்ள ரோஜா மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகை ரோஜா வகைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. மேலும், வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.
இச்செடிகளில் தற்போது ரோஜா மலர்கள் பூத்துள்ளன. அடுத்த மாதம் 10ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சி நெருங்கிய நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.