புதுடெல்லி: : அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடனும் பிரதமர் உரையாட உள்ளார். ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின்படி இன்று காணொலிக்காட்சி வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகளின் ஆதரவுடன் இந்தப் பணியாளர் சேர்ப்பு நடைபெறுகிறது.
இதனிடையே வேலைவாய்ப்பு முகாம் மூலம் அரசுத் துறைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், வணிக எழுத்தர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு எழுத்தர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமை காவலர், உதவி கமாண்டன்ட், முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவி பதிவாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. சென்னையில் 247 பேருக்கு அஞ்சல், ரயில்வே பணி நியமன ஆணைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.