Sunday, July 20, 2025
Home செய்திகள்இந்தியா தீவிரவாத கும்பலுக்கு நிதி திரட்ட கொள்ளை தென் மாநிலங்களில் மத மோதலை ஏற்படுத்தி நாச வேலை நடத்த சதி: கைதான 4 பேர் பற்றிய பகீர் தகவல்

தீவிரவாத கும்பலுக்கு நிதி திரட்ட கொள்ளை தென் மாநிலங்களில் மத மோதலை ஏற்படுத்தி நாச வேலை நடத்த சதி: கைதான 4 பேர் பற்றிய பகீர் தகவல்

by Francis

திருவனந்தபுரம்: சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் கேரளாவில் என்ஐஏ கைது செய்த கேரளாவை சேர்ந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில் கேரளா, தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் மத மோதல்களை ஏற்படுத்தி நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. மேலும் வங்கி உள்பட பல இடங்களில் கொள்ளையடித்து அந்த பணத்தை தீவிரவாத கும்பலுக்கு அளிக்கவும் திட்டமிட்டிருந்தனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக கேரளாவில் ஒரு கும்பல் வங்கிகள், நகைக்கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாக கொச்சி என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். இதில் திருச்சூர் மதிலகத்துகுடியில் என்ற பகுதியை சேர்ந்த ஆசிப் என்பவர் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பாலக்காட்டில் ஒரு கும்பலிடமிருந்து ரூ.30 லட்சம் ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆசிப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆசிப் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆசிப்பை கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் பேரில் இவருடன் தொடர்புடைய திருச்சூரை சேர்ந்த செய்யது நபீல் அகம்மது, ஷியாஸ் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ரயீஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களது வீடுகளில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட 4 பேரும் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை குறிவைத்து மத மோதல்களை ஏற்படுத்தி நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டி வந்தனர். மேலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக நகைக்கடைகள், வங்கிகள் உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டிருந்தனர். 4 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின் அவர்களை கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi