சென்னை: சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்றுவரும் இடங்களில் சாலைகள் சேதமடைந்தால், உடனடியாக சீரமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் பல்வேறு இடங்களில் மெட்ரோ இரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை. ஆற்காடு சாலை, மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:- மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகிறது. தற்போது பூந்தமல்லி முதல் போரூர் நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, அதாவது சாலை சீரமைப்பு பணிகள் 75% நிறைவடைந்துள்ளது. ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு.87% சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. அதேப்போல மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு 65% சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த சாலைகளில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மாதவரம், மற்றும் ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளிலும் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுவிட்டன. வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று சென்னை மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் உடனடியாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.