புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இது பொருளாதார ரீதியாக இரு நாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மூடிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இரு நாடுகளிலும் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், பாகிஸ்தான் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் தற்போதுதான் நிலைமை மேம்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் போர் பதற்றம் அதிகரிப்பு பாகிஸ்தானின் வெளிப்புற நிதி உதவிக்கான அணுகலை குறைக்கலாம். அதன் அந்நிய செலாவணி இருப்புகள் பாதிக்கப்படலாம். இதுபொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என மூடிஸ் கூறி உள்ளது. அதே சமயம் பாகிஸ்தானுடன் மிகக் குறைந்த பொருளாதார உறவுகளை மட்டுமே கொண்டிருப்பதால் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக எந்த இடையூறும் இருக்காது என கூறியிருக்கும் மூடிஸ், போர் பதற்றம் காரணமாக அதிக ராணுவ செலவு இந்தியாவின் நிதி வலிமையைப் பாதிக்கும் என எச்சரித்துள்ளது.