திருமலை: சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு மீது தொடரப்பட்ட கலவர வழக்கில் முன் ஜாமீன் வழங்கி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, சந்திரபாபு மீது சிஐடி போலீசார் அமராவதி தலைநகர் வடிவமைப்பு, உள்வட்ட சாலை வடிவமைப்பு, பைபர் நெட் மோசடி வழக்கு தொடர்ந்தனர். மேலும், புங்கனூர் தொகுதியில் உள்ள ஆங்கல்லு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 8ம்தேதி சந்திரபாபு சுற்றுப்பயணத்தின்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் மீது தாக்குதல் செய்யப்பட்டு வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த கலவரத்திற்கு சந்திரபாபு நாயுடுவே முக்கிய காரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கலவர வழக்கில் உயர்நீதிமன்றம் நேற்று முன் ஜாமீன் வழங்கியது. மேலும் 2 வழக்கில் ஜாமீன் கிடைக்க வேண்டிய நிலையில் திறன் மேம்பாட்டு வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பைபர்நெட் ஊழல் வழக்கில் வரும் 18ம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஆந்திரா அரசு உறுதியளித்துள்ளது.