சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து வரும் நெல் வரத்து குறைந்ததால், தமிழகத்தில் அரிசி விலை கிலோவிற்கு ரூ.2 முதல் ரூ.5 வரை திடீரென உயர்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் தமிழகத்திற்கு வரும் நெல்லின் அளவு வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அரிசி விலை தரத்திற்கு ஏற்றார் போல் கிலோ ஒன்றிற்கு ரூ.2 முதல் ரூ.5 வரை திடீரென உயர்ந்துள்ளது. மூட்ைடக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சன்ன ரக பொன்னி அரிசி ரகங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. வரத்து சீராக இருந்த நிலையில் அரிசி விலையும் சீராக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி அதிகமாக செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்திற்கு அரவைக்கு வரும் நெல்லின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த அறுவடை வரை நீடிக்கும்’’என்றார்.