சென்னை: சாலை விபத்துகளில் சிக்குபவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு ரூ.10,000 வெகுமதியாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி ஒரு மணி நேரத்தில் 47 விபத்துகள் நடந்து 18 பேர் உயிரிழப்பதாகவும், ஒரு நாளைக்கு 1130 விபத்துகள் ஏற்பட்டு 422 பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை குறைக்க அரசு தரப்பில் சாலைகளின் தரத்தை உயர்த்துதல், வாகனங்களை தணிக்கை செய்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் தீவிரமாக மக்களிடையே அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நபர்களுக்கு ஊக்க தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் ஆண்டிற்கான போக்குவரத்து துறை மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் மோட்டார் வாகன சட்டத்தின்படி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில், சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே, ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையுடன், இனி மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.