சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: வனத்தொழில் பழகுநர்(குரூப் 6) பதவியில் காலியாக 10 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 4 முதல் 9ம் தேதி வரையும், 11 மற்றும் 27ம் தேதியும் நடந்தது. இத்தேர்வில் விண்ணப்பத்தாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக 40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குனர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 121 பணியிடத்துக்கான தேர்வில் 144 பேரும், தமிழ்நாடு தடவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் காலியாக உள்ள 31 இடத்துக்கான தேர்வில் 96 பேரும், ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணியில் அடங்கிய 40 காலி பணியிடத்துக்கான தேர்வில் 121 பேரும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.