நெல்லை: நெல்லை மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற ஏட்டுகள் ஜோசப், பட்டமுத்து ஆகியோர் புகார் அளித்த பெண்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோசிடம், சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட கமிஷனர், விசாரிக்க சென்ற இடத்தில் பெண்களை மரியாதை குறைவாக பேசிய ஏட்டுகள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் நெல்லை மாநகரில் அதுதொடர்பான புகாரில் சிக்கிய போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.