புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. மாநாட்டில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் 19 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியான 26 பேருக்கு மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பாஜ தலைமையிலான 3வது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவு குறித்தும், அரசின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஆயுதப்படைகளின் வீரத்தையும், பிரதமர் மோடியின் துணிச்சலான தலைமையை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியானா முதல்வர் நயாப் சைனி கொண்டு வந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, நாடு தன்னிறைவை நோக்கிச் சென்றதில் அடைந்த சாதனைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் துல்லியத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகும் ’’ என கூறினார்.