மதுரை: நகைக்கடன் புதிய விதிமுறைகள் விவகாரத்தில் மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்படும் என சு.வெங்கடேசன் எம்பிக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதிலளித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய நகைக் கடன் நகல் விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28ல் கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ஜூன் 4ல் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார். அவரது பதிலில், தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே. உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்.
இதுதொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது. சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, இப்பிரச்னை மீதான தீர்வை கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.