செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் திருக்கழுக்குன்றம், மற்றும் மதுராந்தகம் போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலராக திருவள்ளுவன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5-நாட்களுக்கு முன்பு (மே 31 ஆம் தேதி) பணிக்காலம் முடிந்து ஒய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து இன்றுவரை செங்கல்பட்டு போக்குவரத்து அலுவலகத்திற்கு அலுவலர் யாரும் நியமிக்கப்படவில்லை.
இதனால், செங்கல்பட்டு மதுராந்தகம் கூடுவாஞ்சேரி திருக்கழுக்குன்றம் செய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு பெர்மிட், தேசிய பெர்மிட், முகவரி மாற்றம், வாகன உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன எப்.சி ஆகிய பணிகள் மட்டும் பிரேக் இன்ஸ்பெக்டர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் புதியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.