சென்னை: வாடகை வீட்டை உரிமையாளருக்கு தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்தால் மோசடி வழக்கு பாயும் என டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து மூன்றாம் தரப்பினரிடம் அடமானம் வைத்து, உண்மையான உரிமையாளர்களுக்குத் தெரியாமல் பெரும் தொகையைப் பெறுவது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டது.
சென்னை முகப்பேரில் கனகராஜ் என்பவரின் வீட்டை ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து ராமலிங்கம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஜாமின் கோரி ராமலிங்கம் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், மோசடிகளை தடுக்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உத்தரவிட்டிருந்தது.
மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோவை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது. விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த டிஜிபி, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.