சூலூர்: தனது மாட்டுக்கொட்டகையில் சிலரை அடிக்கடிசந்தித்ததால் நடத்தையில் சந்தேகத்தால் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு விவசாயி போலீசில் சரணடைந்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே பீடம்பள்ளி கள்ளிதோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). விவசாயியான இவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். பிறகு மனைவியை பிரிந்து ராஜேந்திரன் தனியாக வசித்து வந்தார். நண்பர் பீடம்பள்ளி அயோத்தியாபுரத்தை சேர்ந்த செந்தில் (55) என்பவருடன் சேர்ந்து ராஜேந்திரன் பால் வியாபாரம் செய்து வந்தார்.
செந்தில் கூறியதன் பேரில் தனது மாட்டுக்கொட்டகையை பாப்பம்பட்டியை சேர்ந்த ரம்யா (30) என்பவருக்கு நாய்கள் வளர்க்க வாடகைக்கு கொடுத்தார். அந்த மாட்டு கொட்டகையில் 45 நாட்களாக தங்கி 4 நாய்களை ரம்யா வளர்த்து வந்தார். அவரை பார்க்க அவ்வப்போது சிலர் ஆட்டோவில் வந்து சென்றதால் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் மாட்டு கொட்டகையை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்திலும் ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ரம்யாவை பார்க்க வந்த சிலரை ராஜேந்திரன் தடுத்தார். இதனால் ரம்யாவுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் ரம்யாவை சரமாரியாக வெட்டினார். இதில், அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து, அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் சரணடைந்தார். போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.