காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள சம்மந்தமூர்த்திநகர் மாநகராட்சி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 43வது வார்டு பகுதியில் அதியமான்நகர், சம்மந்தமூர்த்திநகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சம்மந்தமூர்த்திநகர் பூங்கா நவீன முறையில் புதுப்பிக்கும் பணி ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான சறுக்கு மரம், ஊஞ்சல், நடைபயிற்சி மேற்கொள்ள பாதை, புல்தரை, யோகாசன பயிற்சி கூடம், கழிவறை என அனைத்து வசதிகளுடன் பூங்கா கடந்த 2022 டிசம்பர் மாதம் பணி முடிவடைந்தது. ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு மேலாகியும் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்கா நடைபாதையில் செடிகள் முளைத்துள்ளன. பூங்காவில் உள்ள குப்பைத்தொட்டி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன அழகு சாதன பொருட்கள் சேதமடைந்து வருகிறது. எனவே, மாநகராட்சி சார்பில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப் படாமல் உள்ள சம்மந்தமூர்த்திநகர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.