லக்கிம்பூர்: உத்தர பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட 6 மாத கர்ப்பிணி ஒருவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த பெண்ணின் கணவர் உட்பட இருவரை போலீசார் கைது ெசய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் பாலியா பகுதியை சேர்ந்த சீமா கவுதம் என்ற பெண்ணை, அதேபகுதியை சேர்ந்த நவேத் என்ற வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தினர் என்பதால், நவேத்தின் குடும்பத்தில் அவர்களை சேர்க்கவில்லை. அதனால் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் நவேத் வசித்து வந்தார். இதற்கிடையே சீமா கவுதமின் பெயர் ஜோயா சித்திக் என மாற்றப்பட்டது.
தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த சீமா கவுதமிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மயக்க நிலையில் இருந்த அவரை நேற்றிரவு நவேத்தும் அவரது நண்பரும், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சீமா கவுதம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். தகவலறிந்த போலீசார் சீமா கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சீமா கவுதமை மதம் மாறக் கோரி கட்டாயப்படுத்தியதாகவும், அவர் சம்மதம் தெரிவிக்காததால் அவரை விஷம் வைத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து நவேத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.