மதுரை: இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மக்களை மத ரீதியாக பிரித்து வைத்து, ஆட்சியில் நீடிக்க விரும்புகிறது பாஜக என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கே.கே.நகரில் மக்கள் நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மதநல்லிணக்க மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன் பேசுகையில், ‘‘1990களில் ஆர்எஸ்எஸ் கும்பல் பல்வேறு முயற்சிகளை செய்து தோற்றுப் போய் ஓடினர். இப்போது மீண்டும் ஒன்றிய அரசின் உதவியுடன் பிரச்னைகளை உருவாக்குகின்றனர்’’ என்றார்.
இதையடுத்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேசியதாவது: இந்து மத நம்பிக்கை வேறு. அதனை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு. மத குருமார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். சங்கராச்சாரியார்கள் பாஜவை கண்டிக்காமல் இருக்கின்றனர். சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைக்கின்றனர். நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம். ஆனால், பாரதீய ஜனதா இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் என மக்களை மத ரீதியாக பிரித்து, ஆட்சியில் நீடிக்க விரும்புகிறது.
ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என, பாஜவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒரே நாளில் கொண்டு வந்து, ஓபிசி பிரிவினருக்கு துரோகம் செய்தனர். இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.