சிவகாசி: சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளுக்காக தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கமாக பட்டாசு ஆலை நிர்வாகம் வழங்கியது. ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பட்டாசு ஆலை நிர்வாகம் வழங்கியது.
சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்த ராமசாமி மகன் கணேச மூர்த்தி (43). இவர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட ரெங்கபாளையம் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலையும் அதனுடன் பட்டாசு விற்பனை கடையும் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். பட்டாசு ஆலையில் பணிபுரிந்த சுமார் 15 தொழிலாளர்கள் பட்டாசு கடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த ஆலையில் இன்று மதியம் உணவு இடைவேலையின்போது, உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது அருகே இருந்த பட்டாசு விற்பனை கடையில் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. இதனிடையே, சிவகாசிக்கு அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சக்கரம் ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்நிலையில் சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.