சென்னை: வியாசர்பாடி தீ விபத்துக்கு பிறகு தாக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான கருத்துகள் பரவி வருகிறது. மேலும் விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் நியமனம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையர் கொடுத்த அறிக்கையின்படி, செய்திகளில் வெளியானது போன்று காவல் துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை.
மேலும் அவ்விசாரணையில் ஒருசிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துகளை பரப்பி வருவதாகத் தெரியவருகிறது. இருப்பினும், சென்னை பெருநகர காவல் ஆணையர் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையரை (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.