சென்னை: பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் முயற்சியால் சென்னை முழுவதும் 200 இடங்களில் வரும் ஜூன் மாதல் முதல் ‘ரெட் பட்டன் – ரோபோட்டிக் காப்’ என்ற பாதுகாப்பு சாதனம் அமைக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் எல்லையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று வரும் இடங்களிலும் சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற சாதனைத்தை பரிசோதனை செய்தனர்.
இந்த பரிசோதனையில் அந்த சாதனம் முறையாக வேலை செய்ததால், சென்னை முழுவதும் 200 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் அருண் செய்து வருகிறார். அதன்படி சென்னை பெருநகர 12 காவல் மாவட்டங்கள் கொண்ட 4 காவல் மண்டலங்களில் தலா 50 இடங்களில் ‘ரெட்பட்டன்- ரோபோட்டிக்காப்’ சாதனத்தை பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அமைக்க வேண்டிய இடங்கள் குறித்து சரக அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி விவரங்கள் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்புக்காக வரும் ஜூன் முதல் நிறுவப்பட உள்ளது.
இந்த சாதனம் மூலம் சென்னை பெருநகர காவல்துறை மக்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுநலன் கருதும் நிறுவனங்கள் உதவியுடன் காவல் ‘ரெட்பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற பாதுகாப்பு சாதனத்தை நிறுவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
‘ரெட் பட்டன் – ரோபோட்டிக்காப்’
சாதனத்தில் உள்ள சிறப்பம்சங்கள்
* ரெட் பட்டன் சாதனம் 24 மணி நேரமும் 360 டிகிரி பல மீட்டர் தூர துல்லிய கண்காணிப்பு பதிவுகள் செய்யும்.
* ரெட் பட்டன் சாதனத்தின் முன்பு நின்று சிவப்பு நிற பட்டனை அழுத்தினாலே, நேரடி காணொளி காட்சி பதிவு, குரல் தொடர்பு பதிவுகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்களுக்கு அடுத்த நொடியே சென்றடையும்.
* உடனே ரெட் பட்டன் சாதனம் அமைக்கப்பட்ட அருகில் உள்ள ரோந்து வாகனத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு அடுத்த சில நொடிகளில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* சாதனத்தில் உள்ள கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை போலீசார் புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
* புகார் அளிக்கும் நபர், அல்லது பாதிக்கப்பட்ட நபருக்கு உதவ அருகில் உள்ளவர்களும் இந்த சாதனம் மூலம் காவல்துறையுடன் பேசும் வசதி, உயர் தர வீடியோ கேமரா வசதி, மைக்ரோபோன் வசதி, எச்சரிக்கை ஒலி வசதி, ஜி.பி.எஸ் வசதிகளும் உள்ளன.
* இந்த சாதனத்தில் 24 மணி நேரமும் இன்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் மற்றும் அப்டேட் வசதிகள் மூலம் பொதுமக்களின் பிரச்னைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடிவும்.