சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் கோயில்களுக்கு சொந்தமான ரூ5,077 கோடி மதிப்பீட்டிலான 5557.75 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி, நாகப்பட்டினம் மாவட்டம், சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் பாப்பா கோயில் கிராமத்தில் அமைந்துள்ள 1.39 ஏக்கர் நிலத்தில் இரண்டு பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன் தலைமையில் உதவி ஆணையர் ப.ராணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ10 கோடியாகும். அரசு பொறுப்பேற்ற மே 7ம் தேதி 2021 முதல் நேற்று வரை கோயில்களுக்குச் சொந்தமான ரூ5,077 கோடி மதிப்பீட்டிலான 5557.75 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.