கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்பு சட்டத்தை கண்டித்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி முர்ஷிதாபாத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதில் 2 பேர் பலியானார்கள்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒன்றிய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில், மேற்குவங்கத்தில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசை கலைப்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முர்ஷிதாபாத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று அங்கு சென்ற மம்தா பானர்ஜி, ‘ முர்ஷிதாபாத்திற்கு முன்னதாகவே வந்து பார்த்திருக்கலாம். ஆனால் நிலைமை சீராகும் வரை காத்திருந்தேன். ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய அறிக்கை குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. கவர்னரின் உடல்நிலை சரியில்லை. அவர் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்’ என்றார். திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் போஸ், கொல்கத்தாவில் உள்ள கிழக்கு கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.