Wednesday, May 14, 2025
Home செய்திகள்இந்தியா சாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு கொள்கை முடிவை மாற்றி கொள்ள காரணம் என்ன?: 3 கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்

சாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு கொள்கை முடிவை மாற்றி கொள்ள காரணம் என்ன?: 3 கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்

by Francis

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி திடீரென, முழுமையாக, வேறு வழியின்றி தலைகீழ் மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார் என்பது நிறைய சான்றுகள் உள்ளன. கடந்த 2024 ஏப்ரல் 28ல் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரும் அனைவரையும் நகர்ப்புற நக்சல்கள் என விமர்சித்தார். கடந்த 2021 ஜூலையில் மோடி அரசு நாடாளுமன்றத்தில் எஸ்சி, எஸ்டி தவிர சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என குறிப்பிட்டது. 2021 செப்டம்பர் 21ல் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் இதையே குறிப்பிட்டது.
ஒவ்வொரு நல்ல திட்டத்தையும் கொள்கையையும் மோடி அரசு முதலில் எதிர்க்கும், அதை அவதூறு செய்யும், பின்னர் பொதுமக்களின் அழுத்தம், அதிருப்தியை எதிர்கொண்டு அதே கொள்கையை ஏற்றுக் கொள்ளும். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திலும் இது நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் கேட்க 3 கேள்விகள் உள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தனது கொள்கையை அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் நேர்மை அவருக்கு இருக்கிறதா? இந்த கொள்கை மாற்றத்திற்கான காரணங்களை மக்களுக்கும், நாடாளுமன்றத்திலும் அவர் விளக்குவாரா? சாதிவாரி கணக்கெடுப்பை முடிப்பதற்கான காலக்கெடுவை பிரதமர் மோடி உறுதி செய்வாரா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். ஏனெனில், காலக்கெடு இல்லாமல் தலைப்புச் செய்தியை வழங்குவதில் வல்லவர் பிரதமர் மோடி. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொண்டிருக்கும் சமயத்தில் ஒன்றிய அரசு அதை திசை திருப்பும் தந்திரமாக சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi