சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கூறியுள்ளதாவது: நான் ஒரு தொழிலதிபர். எனது மனைவி சுஜாதா திரைப்பட தயாரிப்பாளர். எங்கள் மகள் ஆர்த்தி ரவி. அவரை ஆன்லைனில் லட்சக்கணக்கான மக்கள் பின் ெதாடர்கின்றனர். எனது மகள் ஆர்த்தி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட நடிகர் ரவி மோகன்(எ)ஜெயம் ரவியை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்குள் சில பிரச்னைகள் எழுந்துள்ளதால் தற்போது இரு தரப்பினரும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் பாடசி சுசித்ரா ராமதுரை என்பவர் எனது மகள் மற்றும் எனது மனைவி சுஜாதா மீதும் எனது குடும்ப நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். யூடியூபில் ஒளிபரப்பான ஒரு நேர்காணலில் சுசித்ரா பேசும்போது, ரவி மற்றும் அவருடன் தொடர்புடைய பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்ற நபருக்கு எதிராக பேசுவதற்காக எனது மனைவி சுஜாதா, யூடியூபரான அகமது மீரானுக்கு ரூ.2 லட்சம் பணம், சாக்லேட் பெட்டியை வழங்கியதாக கூறியுள்ளார். அதுபோல் பணமோ பரிசோ எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என அகமது மீரான் கூறியுள்ளார். இதனால் சுசித்ரா கூற்று பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுசித்ரா, என் மகள் ஆர்த்தி ஒரு பிரபல தமிழ் நடிகருடன் சட்டவிரோத உறவில் இருப்பதாக பதிவு செய்துள்ளார். இது எனது மகள் மற்றும் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்பவர்கள் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா இதுபோன்ற வதந்திகளை உருவாக்கி அதன் மூலம் பெயர் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது பணம் சம்பதிப்பதற்கான ஒரு உத்தி என்று நான் சந்தேகிக்கிறேன். அவர் மற்ற பிரபலமான நபர்களை பற்றியும் தனது விருப்பத்துக்கு ஏற்ப பேசியுள்ளார்.
இதுபோன்ற ஆபாசமான கருத்துக்கள் எனது மகள் மற்றும் மனைவியின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் பாதிக்கின்றன. மேலும் எனது குடும்பம் மற்றும் என்னை பற்றிய அவரது வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தமிழ் திரைப்பட துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே சுசித்ரா மீது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 79, 294, 353 மற்றும் 66(எ)67ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.