சென்னை: கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார். அதற்கு தனது விருப்பம் இல்லாமல் ரவி விவாகரத்தை அறிவித்ததாக ஆர்த்தி கூறியிருந்தார். இந்நிலையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் பரவியது. நேற்று சென்னையில் நடந்த திருமண விழாவில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இதன் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வந்தது. இதனையடுத்து ரவிமோகனின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: ஒரு வருடமாக என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அவை எதற்கும் நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன்.
ஆனால், இன்று வெளியான புகைப்படங்களையும், அதில் போடப்பட்ட தலைப்புகளையும் பார்த்தபோது உண்மை எதுவென உலகுக்கு தெரிந்தது. 18 ஆண்டுகளாக எனக்கு அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை மட்டும் விட்டுச்செல்லவில்லை. எனக்கு அளித்த வாக்குறுதிகளில் மற்றும் பொறுப்புகளில் இருந்தும் விலகிச் சென்றுள்ளார். எங்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை. அதுவரை எனது இன்ஸ்டாவில் என் பெயர் ஆர்த்தி ரவி என்றுதான் இருக்கும்.
என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என ஊடகத்திடம் சொல்லி கொள்கிறேன். ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது கடமையில் இருந்து தவறி 2 மகன்களையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தாயின் போராட்டம். இரண்டு குழந்தைகள் இன்றும் உங்களை அப்பா என்று தான் அழைக்கிறார்கள். அவர்களுக்காக நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.