நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பின், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.
ரூ.34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்டவையாக இந்த டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் 600 தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24 X 7 பாதுகாப்பு வசதிகள் , உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.