நாகப்பட்டினம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.
அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் மீனவர்களை கொடூர ஆயுதங்களால் அடித்து விரட்டியடிப்பதோடு, அவர்களது வலைகள் மற்றும் மீன்களை பறித்து சென்றுவிடுவார்கள். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களுக் படகுகளுக்குள் வந்து அவர்களின் வலைகள் அறுத்ததோடு, பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர்.