Monday, June 23, 2025
Home ஆன்மிகம் ராமரின் அடையாளம் பர்ணசாலை!

ராமரின் அடையாளம் பர்ணசாலை!

by Porselvi

தெலங்கானா மாநிலம் கோத்த குடம் மாவட்டத்தில் பத்ராத்ரி பகுதியில் தும்முகுடேம் மண்டலத்தில் பர்ணசாலை கிராமம் அமைந்துள்ளது. இதனை ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் எனக் கூறுவர். இயற்கை அழகு மற்றும் கிராமத்தின் அமைதியான சூழல் இங்கு ராமர் பர்ணசாலை அமைத்து வசிக்க உதவியுள்ளது.

அழகில் மயங்குதல்

இங்கு ராமனுடன் சீதை தங்கியிருந்த போதுதான் ராவணனால் கடத்தப்பட்டாள். லட்சுமணன் கிழித்த கோட்டை சீதை தாண்டியதும் இங்குதான்! உண்மையில், ராமாயணத்தின் முக்கிய கட்டமே இங்குதான் நடந்தது. இந்த இடத்தை தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ராவணனின் தங்கை சூர்ப்பணகை தன்னுடைய இரண்டு அண்ணன்களை (மாரிச்சன், சுபாகு) காண காட்டுக்கு வருகிறாள். வந்த இடத்தில கோதாவரி நதிக்கரையில் பர்ணசாலை அமைத்து சிலர் வாழ்ந்து வருவதை கண்டாள். யார் என்று காண அந்த இடத்துக்கு வந்த அவளுக்கு ராமனின் மிக அழகான முகமும், உடல் வாகும் அவளை வெகுவாக கவர்ந்தது. ராமர் மீது மோகம் கொண்டு, அவர் அருகில் வந்து “என்னை திருமணம் செய்து கொள்’’ என்றாள்.ஒரு அரக்கி தன்னை நெருங்கி திருமணம் செய்து கொள் எனக் கூறியது, அவனுக்கு சிரிப்பை உண்டாக்கியது. எனக்கு ஏற்கனவே மனைவி இருக்கிறாள். அதோ அந்த சீதாதான் என் மனைவி எனக்கூறி சீதையை அருகில் அழைத்து காட்டினார். சீதையை பார்த்தவள்.. அவளுடைய அழகிலும். சாந்தத்திலும் மயங்கினாள். இப்படி ஒரு பெண்ணை மணந்தவன் இன்னொரு பெண்ணை ஏற்பானா?! என தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள், தன்னுடைய குரலில் மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு,“என்னையும் திருமணம் செய்து கொள்ளேன்’’ என மாற்றிக் கேட்டாள்.

ராமனின் குறும்பு

இதனிடையே ராமனின் மனதில் குறும்பு புகுந்து கொண்டது. எனக்கு சீதா இருக்கிறாள். என் தம்பி லட்சுமணனுக்குதான். இங்கு மனைவியில்லை‌! அவனை கேட்டு, திருமணம் செய்து கொள்ளேன் எனக்கூற, சூர்ப்பணகையும் மறுபேச்சு பேசாது, சற்று தள்ளி அமர்ந்திருந்த லட்சுமணனை நோக்கிச் சென்றாள். அங்கு காவல் பணியில் இருந்த லட்சுமணனிடம் சென்று, என்னை திருமணம் செய்து கொள் என வேண்டினாள். லட்சுமணன் “என் மனைவி நாட்டில் இருக்கிறாள் எனக்கு அவளே போதும்’’ என்றான்.“முடியாது. நீயாவது என்னைத் திருமணம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்’’ என அடம் பிடித்தாள் சூர்ப்பணகை! லட்சுமணனுக்கு கோபம் வந்தது. என்னிடம் விளையாட்டு வேண்டாம். சென்று விடு என்றான்.சூர்ப்பணகை தொடர்ந்து அடம் பிடிக்க, கத்தியை எடுத்து அவள் மூக்கை அறுத்துவிட்டான்.சூர்ப்பணகைக்கோ மூக்கை அறுத்த லட்சுமணன் மீது கோபம் வரவில்லை. மாறாக ராமன் மீது கோபம் வந்தது. அடுத்து சீதையின் மீது திரும்பியது.

ராவணனைத் தூண்டிவிடுதல்

“இவ்வளவுக்கும் உன் அழகுதான் காரணம். இந்த அழகுடன் நீ காட்டில் ஒரு சாதாரண மனிதனுடன் வாழ தகுதியில்லை. மாறாகக் கம்பீரமான லங்காதிபதியான என் அண்ணன் ராவணனுக்கே பொருத்தமானவள். அவனிடம் சென்று உன் அழகு பற்றி கூறி அவனை இங்கு உன்னைத் தேடி வரச் செய்வேன்’’ என கடும் கோபம் கொண்டு புறப்பட்டாள் சூர்ப்பணகை. பிறகு நடந்ததை ராவணனிடம் கூறியதுடன், அங்குள்ள மனிதனின் மனைவி மிக அழகாக இருக்கிறாள். அவள் உனக்கு மிக பொருத்தமானவள் எனக்கூறி ராவணனின் ஆசையை தூண்டுகிறாள்.தூண்டப்பட்ட ராவணன், சீதையை கவர மாரீசனின் உதவியை நாடுகிறான். அதன் படி மாரீசன் தங்க மான்வடிவில் சீதையின்கண்ணில் பட, அதன் அழகில் மயங்கிய சீதை ராமரிடம் அதனை வளர்க்க பிடித்துத் தரும்படி கேட்க, ராமரும் மிகுந்த அக்கறையுடன் அதை தேடிச் செல்ல, மாரீசன் ஓடும் போதே “ஐய்யோ.. லட்சுமணா’’ என ராமரின் குரலில் அலற, அதனை கேட்ட சீதா திகைத்து லட்சுமணனை போக சொல்ல, அவனோ அதனை மறுக்க, சீதை வெறுப்பை சிந்த வேறு வழியில்லாமல் லட்சுமணன் ஒரு கோட்டை கிழித்து அதனை தாண்ட வேண்டாம் என சொல்லி செல்கிறாள்.லட்சுமணன் சென்றபின் ராவணன் சன்யாசி வேடத்தில் பிச்சை கேட்டு வருகிறான். சீதை கோட்டைத் தாண்டாமல் பிச்சை அளிக்க அதை ஏற்க மறுத்து ராவணன் கோட்டைத் தாண்டி வந்து பிச்சை இடுமாறு கூறுகிறான்.சீதையோ வரும் சங்கடம் அறியாமல் அந்த கோட்டைத் தாண்டிச் செல்ல. ராவணன் தன் சுய உருவத்தை வெளிப் படுத்தி அவளை பூமி மண்ணுடன் சேர்த்துத் தூக்கிச் சென்றுவிடுகிறான். இதுவரை படித்ததெல்லாம் நாம் செல்லவுள்ள பர்ணசாலையில் நடந்ததுதான்.

இன்றும் அடையாளங்கள்

“பர்ண’’ என்றால் இலைகள், “சாலா’’ என்றால் வீடு. உண்மையில் மரங்களால் சூழப்பட்ட பகுதி. ராமர் இங்கு ஒரு ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு சில காலம் வாழ்ந்தார். வேதங்கள், காடுகள் அதன் முக்கியத்துவம் பற்றியும், அதன் பாதுகாப்பு பற்றியும் கூறியுள்ளது. கோதாவரி நதிக்கரையில் பர்ணசாலை அமைந்துள்ளது‌. சீதை, இங்கு ஓடும் ஓடையில் நீராடி, தனது ஆடைகளை துவைத்து ராதா குட்டா என்ற இடத்தில் உலர்த்தியுள்ளார். ராவணன் தன் புஷ்பக விமானத்தை ஆற்றின் எதிர் கரையில் உள்ள குன்றில் நிறுத்தி இறங்கி வந்துள்ளான். சீதையை கடத்திய போது ஏற்பட்ட பள்ளம் இன்றும் உள்ளது. பர்ணசாலையில் உள்ள ஒரு சிறு குடிசையின் உள்ளே ராமர், சீதை மற்றும் லட்சுமணனின் சிற்பங்களை தரிசிக்கிறோம்.இங்குள்ள பாறை மேற்பரப்பில் ராமர் பாதம் உள்ளது. அதனையும் தரிசிக்கிறோம். அருகில் ஒரு குகை உள்ளது. அதனுள் ராமர் பூஜித்ததாககூறப்படும் லிங்கம் உள்ளது. வெளியே சிவன் – பார்வதி, வில்லுடன் ராமர், காவலாளி போல் லட்சுமணன் ஆகியோர் சிலையாக நிற்கின்றனர். இது தவிர சுற்றிவரும் போது சீதை ஆசைப்பட்ட தங்க மான் மற்றும் அதனை துரத்திய ராமர் ஆகியோர்பாதங்கள், ராவணனின் தேர் சுவடுகள் என பல உள்ளன.இங்கு ராமாயணம் பர்ணசாலை சம்பந்தப் பட்ட காட்சிகளை நிறையவே காணலாம். இதனை தரிசிக்க இன்று சாலை வசதி உள்ளது. அருகில் ஓடும் கோதாவரியில் படகு போக்குவரத்து உள்ளது. இது நம்மை பத்ராச்சலத்திற்குக்கூட அழைத்துச் செல்கிறது.

பார்வை நேரம்: காலை 6மணி முதல் 1மணிவரை, மாலை:- 3மணி முதல் 8.30 மணிவரை.

எளிதாக பயணிக்க: பத்ராசலத்திலிருந்து 32கி.மீ தூரம் பயணித்தால் இங்கு வந்துவிடலாம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi