சென்னை: தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ராமநாதபுரத்தில், ஆகஸ்ட் 17ம் தேதி நடக்கிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல்’ உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன.
மேற்கண்ட தீர்மானங்களின்படி, திமுகவில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு திமுக தலைமையால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்’ நடத்த முடிவெடுக்கப்பட்டு, முதலாவதாக கடந்த ஜூலை 26 அன்று திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதைத் தொடர்ந்து, தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்’ வருகிற 17ம் தேதி ராமநாதபுரம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூர் என்ற இடத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது. தென் மண்டலத்துக்கு உட்பட்ட 19 திமுக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை’ அழைத்து வந்து, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.