சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என்று பீகார் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தெள்ள தெளிவாக கூறிவிட்டன. ஆந்திரத்தில் வரும் 15ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் தான் சமூக நீதி வழங்க முடியும் என்றால், தமிழகத்தைச் சுற்றியுள்ள இந்த மாநிலங்கள் எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்றன. இப்போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.