சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அயல்பணி பேராசிரியர்களை, அரசு கல்லூரி ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012ம், ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து தேவைக்கும் அதிகமாக இருப்பதாக கணக்கிடப் பட்டவர்களில் 369 பேராசிரியர்கள் முதல் கட்டமாக அயல்பணி முறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன்பிறகும் படிப்படியாக அனுப்பப்பட்டவர்களையும் சேர்த்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளில் அயல்பணியில் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் 7 ஆண்டுகளாக அயல்பணி முறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசு கல்லூரியில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. வாக்குறுதிப்படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே அழைத்திருக்க வேண்டும்.
அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், அண்ணாமலை பல்கலைக்கழகச் சீரமைப்பு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், அப்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியுமான சிவதாஸ் மீனா அளித்த பரிந்துரைப்படி, அயல்பணி பேராசிரியர்களை அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாகவே அறிவிக்க முடியும். ஆனால், இதுகுறித்த கோரிக்கையை அயல்பணி பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.