Thursday, June 19, 2025
Home செய்திகள்Showinpage வன்னியர் சங்கத்தின் ஆதரவு; ராமதாசுக்கா அன்புமணிக்கா?: தைலாபுரத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்

வன்னியர் சங்கத்தின் ஆதரவு; ராமதாசுக்கா அன்புமணிக்கா?: தைலாபுரத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்

by Suresh

திண்டிவனம்: ராமதாஸ் தலைமையில் இன்று வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் தைலாபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் புறக்கணித்து போல், இந்த கூட்டத்தையும் வன்னியர் சங்க நிர்வாகிகள் புறக்கணிப்பார்களா? அல்லது கலந்து கொள்வார்களா? என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாமக நிறுவனரான தந்தை ராமதாசுக்கும், தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கட்சியினர் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

ராமதாஸ் பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்தது, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது, சித்தரை முழு நிலவு மாநாட்டில் அன்புமணிக்கு எதிரான ராமதாஸ் பேச்சு என அடுத்தடுத்து சம்பவங்களால் பாமகவில் சமீப நாட்களாக அதிகார மோதல் பிரச்னை வெடித்து உள்ளது. இந்த சூழலில், கடந்த 16ம் தேதி தைலாபுர தோட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். மொத்தமுள்ள 182 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களில் வெறும் 23 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 159 பேர் புறக்கணித்தனர்.

நேற்று முன்தினம் மகளிரணி, மாணவரணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் நடத்தினர். இதில் சொற்ப அளவிலேயே நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக, மகளிர் அணியில் 273 நிர்வாகிகள் உள்ள நிலையில் 5 பேர் மட்டுமே வந்திருந்ததால் ராமதாஸ் அதிர்ச்சி அடைந்தார். மாணவரணி மாநில தலைவர் கோபி, செயலாளர் முரளி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினர். இளைஞரணி அணியில் 5 பேர் மட்டும் முகுந்தனை சந்தித்து பேசினர். இதுதவிர இக்கூட்டத்துக்கு கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட சில தலைமை நிர்வாகிகள் வந்திருந்தனர். 2 நாட்கள் நடந்த ஆலோசனை கூட்டத்தை கட்சியின் தலைவர் அன்புமணி புறக்கணித்தார்.

ராமதாஸ் நடத்திய 2 நாள் கூட்டத்தில் பல்வேறு அணிகள் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பெரும்பான்மையானோர் புறக்கணித்ததால் கட்சிக்குள் அன்புமணி கை ஓங்கி உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குறிப்பாக, ராமதாஸ் கூட்டத்துக்கு புறப்பட்ட பெரும்பாலானோரை அன்புமணியே தொடர்பு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமதாஸை ஓரங்கட்டி விட்டு பாமகவின் ஒட்டுமொத்த அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதை சூசகமாக கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, ‘தற்போது பாமகவில் நெருக்கடி உருவாகியுள்ளது உண்மைதான். அதை நான் மறைக்க விரும்பவில்லை. இருவருடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இதில் பாமக சமூகமான முடிவை எட்டி இருவரும் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள்’ என்று தெரிவித்திருந்தார். தந்தை-மகன் மோதல் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் தந்தை- மகன் தங்களின் பலத்தை காட்டும் நிகழ்வாக பேசப்படும் வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று (திங்கள்) காலை 10 மணியளவில் தைலாபுரம் ேதாட்டத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி நிர்வாகிகளுக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி அழைப்பு விடுத்துள்ளார். கட்சியை போன்று வன்னியர் சங்கத்திலும் 91 மாவட்ட செயலாளர்கள், 91 தலைவர்கள் உள்ளனர். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், 2 துணை செயலாளர்கள், 2 துணை தலைவர்கள், ஒரு பொருளாளர் என மாவட்டத்துக்கு 7 வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளனர். கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசியது போல் வன்னியர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து அன்புமணி கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் வன்னியர் சங்க மாநில தலைவர் பூ.தா.அருள்மொழி மற்றும் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு கலந்து கொள்ள உள்ளதால், அனைத்து நிர்வாகிகளும் ராமதாசை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் வன்னியர் சங்க நிர்வாகிகள் யார் பக்கம்? அன்புமணியா? ராமதாஸா? யார் கை ஓங்கும்? என்று பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. அதிகார மோதலால் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான ராமதாஸ் தனது மகனிடத்திலேயே பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தையும் அன்புமணி புறக்கணிப்பாரா அல்லது வன்னியர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. பாமகவை இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்து மகனிடம் ஒப்படைத்த ராமதாஸ் ஓரங்கட்டப்படுவாரா என்பது இன்று நடைபெறும் வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi