Tuesday, June 24, 2025
Home செய்திகள்அரசியல் இருக்கும் இருக்காது…வருவாங்க போவாங்க… செல்லும் செல்லாது… நடக்கும் நடக்காது…புரியாத புதிராய் பேசிய ராமதாஸ்: வியாழக்கிழமை புதிய சஸ்பென்ஸ்

இருக்கும் இருக்காது…வருவாங்க போவாங்க… செல்லும் செல்லாது… நடக்கும் நடக்காது…புரியாத புதிராய் பேசிய ராமதாஸ்: வியாழக்கிழமை புதிய சஸ்பென்ஸ்

by MuthuKumar

பின்னால் இருந்து இயக்குவது யார்?
உங்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘என்னை யாரும் இயக்க முடியாது. நான் 46 ஆண்டு காலம் 95 ஆயிரம் கிராமங்களுக்கு பயணித்து உள்ளேன். உங்கள் ஆதரவோடு பயணிக்கிறேன். இன்னும் எத்தனை வருடம் பயணிப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் உங்களுக்கு தெரியும், உங்களின் வாழ்த்துக்களோடு தொடர்ந்து நான் பயணிப்பேன், அது வெற்றி பயணமாக அமையும்’ என்று ராமதாஸ் பதில் அளித்தார்.

அன்புமணி குறித்த கேள்விக்கு புரியாத புதிராய் பதிலளித்த ராமதாஸ், வியாழக்கிழமை சொல்வதாக புதிய சஸ்பென்ஸ் வைத்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி விவரம் வருமாறு:
கேள்வி: அன்புமணி நான்தான் தலைவர் என்றும், உங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை தொடர்ந்து செயல்படும்படி கூறியுள்ளார். மேலும் பொதுக்குழு கூடி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான், என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார். பாமகவின் சட்ட விதிகள் என்ன?
பதில்: சட்ட விதிகளை நான் பார்க்கவில்லை, பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்.
கேள்வி: நீங்கள் நீக்கிய அனைவருக்கும் மீண்டும் அன்புமணி பதவி அளிக்கிறாரே?
பதில்: இது ஒரு குடும்பத்தில், கட்சியில், நாட்டில் நடப்பது தான். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டாம். நானும் அதை பெரிதாக்கவில்லை.
கேள்வி: உறுப்பினர் அட்டையை உங்கள் புகைப்படத்துடன் அளித்து வருகிறாரே?
பதில்: இதுகுறித்து வியாழக்கிழமை சந்திப்பில் தெரிவிக்கிறேன். அப்போது கலந்துரையாடுவோம்.
கேள்வி: சமூக ஊடக பேரவை ஆலோசனை கூட்டத்தில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசினீர்கள். அடுத்த நாள் அன்புமணி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தீர்கள். இதில் சில முரண்பாடு தெரிகிறதே?
பதில்: இதில் முரண்பாடு இல்லை. நீங்கள் ஏதாவது கேள்வி எழுப்பி இருப்பீர்கள், நான் சொல்லி இருப்பேன்.
கேள்வி: கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் திலகபாமா தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்றும் கூறியுள்ளார். அன்புமணி நீக்கப்படுவாரா?
பதில்: இதேபோல் தேவை இல்லாத கேள்விகள் கேட்க வேண்டாம். திலகபாமாவை நீக்கியது, அந்த பதவியில் ஒரு சிறுபான்மையினரை நியமிக்க வேண்டும். அதனால் ஒரு முஸ்லிம் அல்லது கிறிஸ்டியன் நியமிக்க வேண்டும். இடையில் அந்த பெண்மணியை நியமித்தோம். மீண்டும் ஒரு முஸ்லிமை நியமிப்பதற்காக திருப்பூரை சேர்ந்த மன்சூர் என்பவரை நியமித்துள்ளேன். ஏற்கனவே அவர் பொருளாளராக இருந்தவர். முதல் முதலாக கட்சி துவங்கும்போது பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த பொன்னுசாமி என்னுடன் உள்ளார். என்னை சந்திக்க வந்துள்ளார். அந்த காலத்திலேயே சிறுபான்மையினருக்கு பொருளாளர் பதவி கொடுத்தோம். இடையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. தற்போது மீண்டும் பொருளாளர் பதவி சரி செய்யப்பட்டுள்ளது.
கேள்வி: அதை அன்புமணி செல்லாது என்று கூறி உள்ளாேர?
பதில்: செல்லும் செல்லாது, செல்லாது செல்லும் இதை திருப்பி திருப்பி படித்துக்கொள்ள வேண்டியது தான்.
ேகள்வி: நேற்றிலிருந்து தான் எனக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளாரே?
பதில்: சுதந்திரமாக செயல்படுவது, சுதந்திரமாக எண்ணுவது ஒரு மனிதனுடைய கடமை. அது அவருடைய கருத்து.
கேள்வி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நீங்கள் கூட்டியும் பெரும்பாலானோர் வரவில்லை. ஆனால் அன்புமணி கூட்டிய கூட்டத்துக்கு சென்றுள்ளனர். கட்சியினுடைய பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் என்ற நிலைப்பாடு எழுந்துள்ளதே?
பதில்: வருவார்கள் போவார்கள், மீண்டும் வருவார்கள் போவார்கள், ஒருவர் வருவார், இன்னொருத்தர் போவார். மாவட்ட செயலாளர் செயல்பாட்டை பார்த்து மறுபடியும் மாற்றுவோம். வேறொருவர் வருவார். இது அனைத்து கட்சியிலும் நடைபெறுவது தான்.
கேள்வி: மாறி மாறி நிர்வாகிகளை மாற்றம் செய்வதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதே?
பதில்: ஒரு குழப்பமும் இல்லை. எல்லாம் நாமாக அப்படி நினைத்து கொள்ள வேண்டியதுதான்.
கேள்வி: பொதுக்குழு எப்போது கூடும்?
பதில்: இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை.
கேள்வி: கடந்த அதிமுக கூட்டணியில் உங்களுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இப்போது கட்சியில் நிலவும் குழப்பம் காரணமாக அந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாக சொல்லி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்களே?
பதில்: அது என் காதுக்கு வரவில்லை, நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.
கேள்வி: ஒருவேளை ஒற்றுமையாக இருந்திருந்தால் அந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா?
பதில்: பதவி வரும், போகும். போகும் வரும். வரும்போது வரவேற்போம், போகும்போது அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த பதவிக்கு சொல்லி விடுவோம்.
கேள்வி: அடுத்தகட்டமாக நிர்வாகிகள் மாற்றம் தொடருமா?
பதில்: நிர்வாகிகள் தொடருவார்கள். மற்றவர்கள் மாற்றப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ேபட்டியின்போது பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.த.அருள்மொழி, முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி உடனிருந்தனர்.

பாமகவில் விரைவில் அதிசயம் நடக்கும்

கேள்வி: நீங்கள் அன்புமணியை சந்தித்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று கூறப்படுகிறதே?
பதில்: உலகத்தில் எவ்வளவோ அதிசயங்கள் நடைபெறும். எது, எப்போது நடைபெறும் என்று யாராலும் கணிக்க முடியாது.
கேள்வி: உங்கள் மகனை சந்திப்பதே அதிசயம் என்று சொல்கிறீர்களா?
பதில்: பொதுவாக உலக நியதியை சொன்னேன்.
கேள்வி: இதற்கு தீர்வு தான் என்ன?
பதில்: நீங்கள் தீர்வு சொன்னால் அதன் அடிப்படையில் யோசிக்கிறேன்.
கேள்வி: நீங்கள் இருவரும் அமர்ந்து பேசினால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறதே?
பதில்: எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை. நீங்கள் விரும்புவதால் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.

மூத்த மகள் ஒரு மணி நேரம் சந்திப்பு
ராமதாசின் மூத்த மகள் காந்திமதி நேற்று காலை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார். தொடர்ந்து ராமதாசுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அதன்பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த ராமதாஸ் நேற்று சிறிது மாற்றத்துடன் காணப்பட்டார். செய்தியாளர்களின் அனைத்து கேள்விக்கும் அவர் மழுப்பலாக பதிலளித்தார். அன்புமணி குறித்து எந்தவித குற்றச்சாட்டும் அளிக்கவில்லை. மகளின் கோரிக்கையை ஏற்று நேற்று வெளியிட இருந்த முக்கிய அறிவிப்பும் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று பாமக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆக.10ல் பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா: அன்புமணிக்கும் அழைப்பு ?

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டியில், வன்னியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக மகளிர் மாநாடு நடத்துவது வழக்கம். பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு இடையில் சில ஆண்டு காலமாக நடத்தப்படவில்லை. அரசு அந்த இடத்தை புதுப்பித்து அழகுப்படுத்தினார்கள். இந்த ஆண்டு மகளிர் சங்க மாநாடு பூம்புகாரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி, தமிழ் மாதத்தில் ஆடி 25 அன்று மாலை 4 மணியளவில் இந்த மாநாடு நடைபெறும். இதில் கலந்து கொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பூம்புகார் மகளிர் மாநாட்டுக்கு குழு தலைவராக வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி இருப்பார். இதற்காக பல குழுக்கள் உருவாக்கப்படும். அதை அவர் வழி நடத்துவார். நானும் ஆலோசனை வழங்குவேன் என்றார்.

கேள்வி: மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு இருக்குமா?
பதில்: எல்லாருக்கும் அழைப்பு உண்டு. எல்லாரும் கலந்து கொள்ளலாம். யாரையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. சொல்லப் போவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi