பெரம்பூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 75வது வார்டு பகுதியில் கடந்த வருடம் பருவ மழையின்போது மேடவாக்கம் குளக்கரை சாலை, தலைமை செயலக காலனி 6வது தெரு, எஸ்.எஸ்.புரம் பி.பிளாக் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் மழைக்காலத்தின்போது தண்ணீர் தேங்காமல் இருக்க ரூ.3.73 கோடி செலவில் 972.70 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று காலை துவக்கி வைத்தனர்.
பின்னர், மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிகளாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு முதல் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு பருவ மழையின்போது எந்த பகுதிகளில் அதிகமாக தண்ணீர் தேங்கியதோ அந்த பகுதிகளை கண்டறிந்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 75வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைய இன்னும் 5 மாதங்கள் ஆகும். இதை தவிர்த்து மற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். குறிப்பிட்ட இடங்களில் மின்வாரிய அதிகாரிகள், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மின்சாரத்துறை, மெட்ரோ வாட்டர் பணிகள் காரணமாக கால்வாய் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களும் அடையாளம் காணப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்துதான் செயல்பட்டு வருகிறோம். மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், முடிந்தவரை பணிகளை முழுவீச்சில் முடித்துக்கொண்டு வருகிறோம்.
தற்போது பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் உள்ளோம். மணலி, மாதவரம் போன்ற இடங்களில் தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற இடங்களில் 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மழைநீர் வடிகால் பணி என்பது மிகப்பெரிய திட்டம். செப்டம்பர் 15ம் தேதிக்குள் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். மற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் படிப்படியாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர் ரமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.