திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. எல்லா மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வயநாடு, இடுக்கி உள்பட மலையோரப் பகுதிகளில் நிலச்சரிவு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் மலையோரப் பகுதிகள் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் மலையோரப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கொல்லம், திருச்சூர், மலப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கனமழை மேலும் 5 நாள் நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அபாய அளவைத் தாண்டி ஓடும் 9 ஆறுகள்;
கேரளாவில் தொடர் மழை காரணமாக 9 ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஓடும் அச்சன்கோவில் ஆறு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஓடும் வாமனபுரம் ஆறு, வயநாடு மாவட்டத்தில் ஓடும் கபினி ஆறு உள்பட 9 ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. எனவே இந்த ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.