சென்னை: மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாத்திரி பள்ளியை சேர்ந்த ஒரு மாணவனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், கடந்த மே 4ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் ஒன்றிய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து 16 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அதற்கு ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 480 மாணவர்கள் அந்த மையங்களில் தேர்வு எழுதினர். அதில், 13 பேர் மாணவர்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது. அதே வேளையில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் திங்கட்கிழமை தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.