சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் பணியிடங்கள் 22 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகையால் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். கடந்த மாதம் 17ம் தேதி காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்துக்கு முன்னதாக 5000 லோகோ பைலட்டுகள் நியம்மிக்கப்படவுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ரயில் விபத்து நடந்து அடுத்த நாள் ஜூன் 18ம் தேதி 18,000 என அதிகரித்து அறிவித்ததன் பின்னணி என்ன? உண்மையில் அதை விட அதிகமான காலியிடங்கள் ரயில்வேயில் உள்ளது.
அத்துடன் ஜூன் 18 அன்று அறிவிக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்பட எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 1924ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட்டை, கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர். இந்திய ரயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பாஜ அரசால் மூடி மறைத்ததும் ரயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.