புதுடெல்லி: ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பெண் அதிகாரியான ஜெயா வர்மா சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அனில் குமார் லகோட்டி ஓய்வு பெற்றார். இதையடுத்து ரயில்வே வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்கா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. ஜெயா வர்மா இன்று பதவியேற்பார் என்றும் அவர் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை பதவி பதவியில் இருப்பார என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அலகாபாத் பல்கலைகழகத்தில் பட்டம் பயின்ற ஜெயா வர்மா கடந்த 1988ம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து பிரிவில்(ஐஆர்டிஎஸ்) சேர்ந்தார். வடக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே,தென் கிழக்கு ரயில்வே ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் ரயில்வே ஆலோசகராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அவர் பதவியில் இருந்த போது கொல்கத்தா- டாக்கா இடையே மைத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.