டெல்லி: ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் சூரத் கீழமை நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி, சூரத் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, ராகுல்காந்தி தரப்பு சூரத் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், சூரத் நீதிமன்றம் ஏதன் அடிப்படையில் மக்கள் பிரதிநி மீது அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என விளக்கம் கேட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த காரணத்தாலே வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து அவரை தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டு இருந்தார்.
தற்போது அவர் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக அவரது தகுதிநீக்கத்தை நீக்க கோரியும், மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி கலந்துகொள்ள அனுமதிக்க கோரியும் மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் எழுத உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கடித்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால், ராகுல்காந்தி தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.