புதுடெல்லி: ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் இன்று அமெரிக்கா செல்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவரது மக்களவை எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டை ராகுல் காந்தி அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்தார். இதையடுத்து 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய சாதாரண பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க அவர் முடிவு செய்தார். அவர் மீது தொடரப்பட்ட நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனால், தடையில்லா சான்று கேட்டு ராகுல் சார்பில் அந்த நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் புதிய பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்று வழங்கினார்.
இதையடுத்து ராகுல் காந்திக்கு நேற்று புதிய பாஸ்போர்ட் நேற்று வழங்கப்பட்டது. இன்று மாலை அமெரிக்காவுக்கு ராகுல் புறப்படுகிறார். ஜூன் 4 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் அவர், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். வாஷிங்டனில் அமெரிக்க எம்.பி.க்களை சந்திக்கிறார். நியுயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல் பேச உள்ளார்.