பெங்களூரு: பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகிறார். கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டதாக ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
பாஜ மீது அவதூறு பரப்பியதாக ராகுல் காந்தி மீது பாஜ மேலவை உறுப்பினர் கேசவ் பிரசாத் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்த ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஜூன் 7ம் தேதி அவரை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இன்று வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராகிறார்.